கிறிஸ்தவ திருச்சபைகள் மற்றும் போதகர்கள் மையம் நடத்தும் “போதகர்கள் மாநாடு 2026” அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அந்த அழைப்பிதழில், தமிழக சட்டப்பேரவை தலைவர் J.C.D. பிரபாகர் சிறப்பு அழைப்பாளராகவும், 4 அமைச்சர்கள் மற்றும் 3 சட்டமன்ற உறுப்பினர்கள் சிறப்பு விருந்தினர்களாகவும் பங்கேற்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அழைப்பிதழ் உண்மையானது என்றால், சட்டமன்ற கூட்டத்தொடரின் போது பைபிள் வசனங்களுடன் அவை நடவடிக்கைகள் தொடங்கப்படுவதாக ஏற்கனவே எழுந்துள்ள விமர்சனங்களுக்கு இது மேலும் வலு சேர்க்கும் என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கூறியுள்ளார்.
மதபோதகர்கள் மாநாட்டில் சட்டப்பேரவை தலைவர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பது, மதமாற்ற நடவடிக்கைகளுக்கு அரசின் மறைமுக ஆதரவாக பார்க்கப்படுமா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேடைகளில் மதச்சார்பற்ற சமூகநீதி குறித்து பேசிவிட்டு, மதம் சார்ந்த நிகழ்ச்சிகளில் ஆளுங்கட்சி பிரதிநிதிகள் பங்கேற்பது அரசின் கொள்கைக்கு முரணானது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
தமிழக முதல்வர் விஜய் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, அரசு பொறுப்பில் உள்ளவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்த வேண்டும் என்றும் எச். ராஜா வலியுறுத்தியுள்ளார்.
மேலும், “மதச்சார்பற்ற சமூகநீதி அரசின் கொள்கை என்றால், மதம் சார்ந்த நிகழ்ச்சிகளில் ஆளுங்கட்சி மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கக் கூடாது” என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


