பியூஷ் கோயல் சொன்ன குட் நியூஸ்! US டிரேட் டீல்: 99% நிறைவு!

இந்தியா – அமெரிக்கா இடையிலான முக்கியமான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் 99 சதவீத அம்சங்களில் உடன்பாடு எட்டப்பட்டுள்ள நிலையில், எஞ்சியுள்ள 1 சதவீத விவகாரங்களிலும் விரைவில் தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தினார்.இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம், அமெரிக்க சந்தையில் இந்தியாவுக்கு அதிக முன்னுரிமை மற்றும் போட்டித்திறனை உறுதி செய்வதாகும். குறிப்பாக, இந்தியாவுக்கு அண்டை நாடுகள் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளை விட சாதகமான வர்த்தக வாய்ப்புகள் கிடைக்க அமெரிக்கா சட்டரீதியான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

பல்வேறு பொருட்களுக்கான சுங்க வரி சலுகைகள், வர்த்தகத் தடைகளை குறைத்தல், சந்தை அணுகலை விரிவுபடுத்துதல், ஏற்றுமதிக்கான வசதிகளை அதிகரித்தல் உள்ளிட்ட பெரும்பாலான அம்சங்களில் இரு நாடுகளும் ஒருமித்த கருத்தை எட்டியுள்ளதாக பியூஷ் கோயல் கூறினார்.பேச்சுவார்த்தை மிகவும் வெளிப்படையாகவும், சமநிலையுடனும் நடைபெற்றதாக குறிப்பிட்ட அவர், இந்தியா மீது எந்தவித அழுத்தமும் செலுத்தப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

இந்தியா – அமெரிக்கா நேர வித்தியாசம் காரணமாக நள்ளிரவு வரை பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகவும், தனது குழுவினர் தொடர்ந்து பணியாற்றியதாகவும் அவர் கூறினார். “நான் பொதுவாக தாமதமாக உறங்குவதால் எனக்கு சிரமம் இல்லை. ஆனால் என் குழுவினர் இரவு நேரம் வரை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் சற்று சிரமப்பட்டனர்,” என்றார்.

இந்த வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டால், தகவல் தொழில்நுட்பம், மருந்துத் துறை, ஜவுளி, பொறியியல் பொருட்கள், வேளாண் ஏற்றுமதி உள்ளிட்ட பல துறைகளில் இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்க சந்தையில் புதிய வாய்ப்புகள் உருவாகும் என பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும், இரு நாடுகளின் பொருளாதார உறவையும் இந்த ஒப்பந்தம் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் முக்கிய மைல்கல்லாக அமையும் எனக் கருதப்படுகிறது.

Scroll to Top