பிரதமர் மோடி – சனே டகாய்ச்சி சந்திப்பில் பல முக்கிய ஒப்பந்தங்கள்: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி ஆகியோர் இன்று நடைபெற்ற இருதரப்பு உச்சி மாநாட்டைத் தொடர்ந்து கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று, இந்தியா – ஜப்பான் உறவை மேலும் வலுப்படுத்தும் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டனர்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிரதமர் மோடி, இந்தியா – ஜப்பான் உறவு பரஸ்பர நம்பிக்கை, ஜனநாயக மதிப்புகள் மற்றும் நீண்டகால ஒத்துழைப்பை அடிப்படையாகக் கொண்ட “சிறப்பு மூலோபாய மற்றும் உலகளாவிய கூட்டாண்மை” எனக் குறிப்பிட்டார். இரு நாடுகளும் பொருளாதாரம், தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் அமைதிக்காக இணைந்து செயல்பட உறுதியேற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் 10 டிரில்லியன் யென் மதிப்பிலான ஜப்பானிய முதலீடுகளை ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான ஒத்துழைப்பை இரு நாடுகளும் விரிவுபடுத்த ஒப்புக்கொண்டுள்ளதாகவும் மோடி கூறினார்.
மேலும், செயற்கை நுண்ணறிவு (AI), செமிகண்டக்டர் உற்பத்தி, முக்கிய கனிம வளங்கள் (Critical Minerals), தூய்மை எரிசக்தி, பொருளாதார பாதுகாப்பு மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இணைந்து செயல்பட இரு நாடுகளும் தீர்மானித்துள்ளன.
பாதுகாப்புத் துறையில் இந்தியா – ஜப்பான் இடையேயான முதல் கூட்டு பாதுகாப்பு உற்பத்தித் திட்டம் தொடர்பான ஒப்பந்தமும் கையெழுத்தானது. இது இரு நாடுகளின் பாதுகாப்பு ஒத்துழைப்பில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
அதேபோல், இந்தியாவில் 1,000 பயோகேஸ் மற்றும் இயற்கை உர ஆலைகளை அமைக்கும் திட்டத்திற்கும் இரு நாடுகள் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன. இந்த திட்டம் பசுமை எரிசக்தி மற்றும் நிலையான வேளாண் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் விதிமுறைகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கை நிலைநிறுத்த இந்தியாவும் ஜப்பானும் தொடர்ந்து இணைந்து செயல்படும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
சந்திப்பின் போது ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சியை அன்புடன் வரவேற்ற பிரதமர் மோடி, இரு நாடுகளின் நட்பு உறவு எதிர்காலத்தில் மேலும் வலுப்பெறும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
இந்த உச்சி மாநாடு, இந்தியா – ஜப்பான் உறவை முதலீடு, தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் பசுமை வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.


