தஞ்சை மாவட்டம், திருக்கண்டியூரில் உள்ள 1,300 ஆண்டுகள் பழமையான பிரம்மசிரக்கண்டீஸ்வரர் கோவில் நிலத்தில், அறநிலையத் துறையின் அனுமதியின்றி ஈ.வெ.ராமசாமி சிலை நிறுவப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
கோவில் ஹிந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் நிலையில், கடந்த 1990-ஆம் ஆண்டு கோவில் நிலத்தில் இந்த சிலை அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கேட்ட இந்து தமிழர் கட்சித் தலைவர் ராம ரவிக்குமாருக்கு, “கோவில் நிலத்தில் ஈ.வெ.ராமசாமி சிலை அமைக்க எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை” என்று அறநிலையத் துறை பதிலளித்துள்ளது.
இதையடுத்து, கோவில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், சிலையின் அடிப்பகுதியில் உள்ள வாசகங்கள் பக்தர்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதாகவும் ராம ரவிக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் ஈ.வெ.ராமசாமி சிலையையும், அப்பகுதியில் உள்ள கட்சிக் கொடிக்கம்பத்தையும் அகற்ற மாவட்ட நிர்வாகமும், அறநிலையத் துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்துள்ளதாகவும், நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


